அணு மின்நிலைய அதிகாரி வீட்டில் திருடிய வழக்கு: தேடப்பட்ட 2 பேர் சிக்கினர்

கல்பாக்கம் அணு மின்நிலைய அதிகாரி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-21 22:03 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் இமா குளோப் செல்வியா (வயது 54). இவர் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது கணவர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றனர். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது அங்கு இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

2 பேர் கைது

இது குறித்து அவர்கள் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது இமா குளோப் செல்வியா வீட்டில் சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்த புதுப்பட்டினத்தை அடுத்த பல்லவன் நகரை சேர்ந்த வளர்மதி (37) என்பதும், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பானிபூரி கடையில் வேலை செய்யும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பதும் தெரியவந்தது.

போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்