ரெயில் பயணிகள் தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பேட்டி

சிறப்பாக பணிபுரிந்த ரெயில்வே போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கிராப்பட்டியில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

Update: 2018-12-21 22:04 GMT
திருச்சி,

இதில் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், “ரெயில்வே போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலையில் நடந்த ஒரு பெண் கொலை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதேபோல் கடந்த சில மாதங்களாக ரெயில் பயணிகள் தவறவிட்ட செல்போன், நகைகள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அதே இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி உள்ளோம். இதேபோல் ரெயில் பயணிகள் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தரும் புகார்களை மறுக்காமல் பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார். இதனை தொடர்ந்து ரெயில்கள் மற்றும் பிளாட்பாரங்களில் பயணிகளிடம் நடைபெறும் குற்றசம்பவங்களை தடுப்பது குறித்து ரெயில்வே போலீசாருக்கான ஆலோசனைகூட்டமும் நடந்தது. இதில் ரெயில்வே டி.ஐ.ஜி.செந்தில்குமாரி, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்