தஞ்சையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - கிராம நிர்வாக அலுவலர்கள் 175 பேர் கைது

தஞ்சையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்கள் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-21 23:23 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து 6 ஆண்டுகள் கழித்து தான் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதுவும் 30 சதவீதம் தான் வழங்கப்படுகிறது. இதனால் பல கிராமங்களில் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக பதவி உயர்வு பெறமுடியாத நிலை உள்ளது. எனவே 6 ஆண்டுகள் பணி முடித்தவர்களை முதுநிலை கிராம நிர்வாக அலுவலர் (கிரேடு 1) என்றும், அதற்கு முன்பு உள்ளவர்களை கிரேடு 2 என்றும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியினை பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும். தனிச்சிறப்பு ஊதியம் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பு வகிக்கும் காலம் முழுவதும் ஊதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து பல்வேறு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் தஞ்சை மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் 45 பெண்கள் உள்ளிட்ட 175 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்