சபரிமலை அய்யப்ப சீசன் எதிரொலி: மேகமலைக்கு இடம் பெயரும் யானைகள்

சபரிமலை அய்யப்ப சீசன் எதிரொலியாக, மேகமலை வனப்பகுதிக்கு ஏராளமான யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

Update: 2018-12-22 22:45 GMT
சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் மேகமலை உள்ளது. மேகங்கள் தரையிறங்கி வந்து, மலையை முத்தமிட்டு செல்வதால் இதற்கு அப்பெயர் ஏற்பட்டதாக கூறுவர். இயற்கை அன்னை கிள்ளி கொடுக்காமல், அள்ளி கொடுத்திருக்கும் அற்புத காட்சிகள் தினமும் அரங்கேறும். இது, ஒரு சிறந்த சுற்றுலா தலம் ஆகும்.

கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் மேகமலை அமைந்துள்ளது. வருசநாடு மலைத்தொடரின் 4 சிகரங்களின் நடுவே சாய்ந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு சிறந்த விருந்து. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான மேகமலையின் இயற்கை அழகை கண்டுபிடித்து முதலில் ரசித்து மகிழ்ந்தது ஆங்கிலேயர்கள் தான்.

மேகமலையில் இருந்து ஹைவேவிஸ், இரவங்கலாறு, மணலாறு, மேல்மணலாறு, வென்னியாறு, மகராஜாமெட்டு போன்ற கிராமங்களுக்கு செல்லலாம். இந்த மலைக்கிராமங்களிலும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது. தண்ணீர் ததும்பி நிற்கும் அணைகளை கண்டுகளிக்கலாம். இதுமட்டுமின்றி மலைகளுக்கு படிக்கட்டு அமைத்ததை போல ஏராளமான தேயிலை தோட்டங்கள் நம்மை வரவேற்கும்.

இதேபோல் கதிகலங்க வைக்கும் காட்டெருமைகளின் கூட்டத்தை அங்கு பார்க்கலாம். யானைகளின் நடமாட்டம் மேகமலை வனப்பகுதியில் அதிகமாக உள்ளது. இதைத்தவிர சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பல்வேறு பறவைகளின் கூடாரமாகவும் மேகமலை திகழ்கிறது. குறிப்பாக ‘கிரேட் இந்தியன் ஹார்ன்பிலின்’ என்ற பறவை வசிப்பதற்கான சீதோஷ்ண நிலை இங்கு உள்ளது. இது, குறைந்து வரும் பறவை இனம் ஆகும். 4 கிலோ வரை எடை இருக்கும். மஞ்சள், கருப்பு, வெள்ளை நிறங்களில் அந்த பறவை காட்சி அளிக்கும். பழங்களை தின்னும் வகையில் நீண்ட அலகுகளை கொண்டது. இவை, மேகமலையில் அதிக எண்ணிக்கையில் வசிப்பது ஆச்சரியம் தான்.

மேகமலை வனப்பகுதியும், யானைகளும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. காலை, மாலை நேரத்தில் தேயிலை தோட்டங்களுக்குள் யானைகள் கூட்டம், கூட்டமாக வலம் வரும் காட்சியை பார்க்கலாம். அந்த யானைகள், பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து செல்கின்றன. அடிக்கடி தரையிறங்கி செல்லும் மேக கூட்டத்தினால் மலைப்பாதையில் யானைகள் நிற்பது கூட சில நேரத்தில் தெரிவதில்லை. இதனால் யானையின் அருகே சென்று வாகனங்களை நிறுத்தி உயிர் தப்பியவர்களும் இருக்கிறார்கள். மலைப்பாதையில் வாகனத்தில் செல்லும்போது பகலிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு தான் செல்கின்றனர். மேகமலை வனப்பகுதியில் வட்டப்பாறை, வென்னியாறு, சன்னாசி மொட்டை, போதைப்புல்மேடு போன்ற இடங்கள் யானைகள் வலசை செல்லும் பாதைகள் ஆகும். குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் யானைகள் அதிக அளவில் மேகமலையில் முகாமிடுவது வழக்கம் ஆகும். இதற்கு, சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பதே காரணம் ஆகும்.

சபரிமலை சீசன் எதிரொலியாக, கேரள மாநிலம் குன்னிக்காடு வனப்பகுதியில் இருந்து யானைகள் மேகமலைக்கு இடம் பெயர்கின்றன. அதன்படி தற்போது, மேகமலையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட யானைகள், தேயிலை தோட்டங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில், கடந்த 6 மாதங்களில் மேகமலை பகுதியில் 7 யானைகள் பலியாகி இருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு லோயர்கேம்ப் முதல் கயத்தாறு வரை செல்லும் உயர்மின் அழுத்த கம்பி முறையாக பராமரிப்பு இன்றி தாழ்வாக செல்வதே காரணம் ஆகும்.

இந்த விவகாரத்தில், மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விசாரணை நடத்தியது. அப்போது தமிழக மின்சார வாரியத்தலைவர் சமர்ப்பித்த அறிக்கையில், சுருளியாறு முதல் கயத்தாறு வரை செல்லும் உயர்மின் அழுத்தக் கம்பியின் மின் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சபரிமலை சீசன் முடியும் வரை, மேகமலை வனஉயிரின சரணாலயத்தில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சபரிமலை சீசன் என்பதால் மேகமலை வனப்பகுதிக்கு வருகிற யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மை தான். அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மீண்டும் உயர்மின் அழுத்த கம்பியில் சிக்கி யானை உயிரிழக்க வாய்ப்பு இல்லை என்றார்.

மேலும் செய்திகள்