உசிலம்பட்டி அருகே 30 கிலோ கஞ்சாவுடன் இலங்கை வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது ரூ.3¾ லட்சம் பறிமுதல்

உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய இலங்கையை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-12-22 21:35 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எ.ராமநாதபுரம் அருகே கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் எ.ராமநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையே போலீசார் வருவதை கண்ட அந்த நபர்கள் தப்பியோட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார். மற்ற 4 பேரும் சிக்கினர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

எனவே 4 பேரையும் உசிலம்பட்டி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பிடிபட்ட நபர்கள் இலங்கையை சேர்ந்த ராஜிகாந்த் (வயது 33), செல்வகரன் (37), நாகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாகுடியை சேர்ந்த காளிமுத்து மகன் குணசேகரன்(30), உசிலம்பட்டி எ.ராமநாதபுரத்தை சேர்ந்த கல்யாண் என்பது தெரியவந்தது. தப்பியோடிய நபர் கட்டத்தேவன்பட்டியை சேர்ந்த ராமு மகன் மலைச்சாமி(26) என்பதும் தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.

அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்து 350, இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பணநோட்டுகள், செல்போன்கள், 2 பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்