அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி; ஓய்வுபெற்ற துணை பதிவாளர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற துணை பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-22 21:46 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த சக்கந்தி மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் சிவகங்கை செந்தமிழ்நகரில் வசிக்கும் ராகவன்(வயது60) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். ராகவன் ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் துணை பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

சுரேஷின் மனைவி சங்கீதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ராகவன் கடந்த 1.9.2017-ம் ஆண்டு ரூ.8லட்சம் பணம் பெற்றாராம். ஆனால் அவர் பேசியபடி வேலை வாங்கி கொடுக்காமல் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டாராம். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சங்கீதா புகார் செய்தார்.

அப்போது முன் பணமாக ரூ.3 லட்சத்தை ராகவன் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.5லட்சத்தை திருப்பி கொடுக்கவில்லையாம். இது குறித்து சங்கீதா மீதி பணத்தை கேட்கும் போது அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சங்கீதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்மொழிவர்மன், சசிகலா ஆகியோர் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் ராகவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்