ரூ.1.90 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் 4 பேர் கைது

ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-22 23:00 GMT
மும்பை, 

ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் சோதனை

மும்பை கல்பாதேவியில் உள்ள ஷாவேரி பஜாரில், தங்க பட்டறையில் சட்டவிரோதமாக துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் உருக்கப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், அந்த பட்டறையில் வெளிநாட்டு முத்திரை பதித்த தங்க கட்டிகளை உருக்கி, பின்னர் அதை கட்டியாக மாற்றி இந்திய முத்திரை பதித்து மார்கெட்டில் விற்றது கண்டுபிடிக்கபட்டது.

4 பேர் கைது

இதையடுத்து அதிகாரிகள் பட்டறையில் இருந்த 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்கிருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தீபக் ஜேரலா, நிதின் ராதோட், ரிட்மல் பாரிகர் மற்றும் பிராகாஷ் சோனி என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வந்தவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்