திண்டுக்கல் அருகே ஸ்கூட்டர் மீது மரக்கிளை விழுந்து இளம்பெண் பரிதாப சாவு 2 சிறுமிகள் உயிர் தப்பினர்

திண்டுக்கல் அருகே ஸ்கூட்டர் மீது மரக்கிளை விழுந்ததில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். 2 சிறுமிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-12-22 22:26 GMT
தாடிக்கொம்பு,

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு குளத்தூரை சேர்ந்தவர் ராமன். அவருடைய மகள் பாப்பாத்தி (வயது 28). இவர், தனது உறவினரின் குழந்தைகளான சபிதாஸ்ரீ (7) மற்றும் கோகிலாஸ்ரீ (4) ஆகியோரை பள்ளி பஸ்சில் ஏற்றி விடுவதற்காக குளத்தூர் பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வருவது வழக்கம்.

அதன்படி நேற்று பாப்பாத்தி, 2 சிறுமிகளையும் அழைத்து கொண்டு குளத்தூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார். ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது அங்குள்ள வேப்பமரத்தின் கிளை திடீரென முறிந்து பாப்பாத்தி சென்ற ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் பாப்பாத்தி படுகாயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக 2 குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர்.

இதற்கிடையே படுகாயமடைந்த பாப்பாத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்கிளை முறிந்து விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்