அய்யலூர் அருகே, விபத்தில் பலியான மாணவியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

அய்யலூர் அருகே, விபத்தில் பலியான மாணவியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-22 23:15 GMT
வடமதுரை,

அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் உலகன். அவருடைய மகள் மாரியம்மாள் (வயது 13). இவள், அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தீத்தாகிழவனூரை அடுத்த பேசும் பழனியாண்டவர் கோவில் அருகே திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையை கடக்க முயன்றாள்.

அப்போது அந்த வழியாக வந்த கார், மாணவி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தாள். இந்த விபத்து குறித்து, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த கார் டிரைவர் குகன் என்பவர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மதியம் மாரியம்மாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. இதையடுத்து அவளுடைய உடல், தீத்தாகிழவனூருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தீத்தாகிழவனூர் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அங்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மாரியம்மாளின் உடலை திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங் களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதி வளைவானது என்பதால் அடிக்கடி அங்கு சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதிகளில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் உடனடியாக அந்த இடத்தில் இரும்பு தடுப்புகளை வைத்தனர்.

இதனால் சமாதானமடைந்த அவர்கள், மறியலை கைவிட்டு மாரியம்மாளின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக திண்டுக் கல்-திருச்சி நெடுஞ்சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்