புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 ம ணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-07 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நாராயணபுரம் களப்பால் கிராமத்தில் 580-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்தும், 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி வழங்கக்கோரியும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ மாணிக்கம், நாராயணசாமி ஆகியோர் தலைமையில் களப்பால் பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ரஞ்சனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி-வேதபுரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

மேலும் செய்திகள்