சேத்தியாத்தோப்பில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பல்கலைக்கழக ஊழியர் சாவு

சேத்தியாத்தோப்பில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் உயிரிழந்தார்.

Update: 2019-01-13 22:30 GMT
சேத்தியாத்தோப்பு, 

புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன்கள் பாலமுருகன்(36), செந்தில்குமார்(34). இருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். அதோடு கீரப்பாளையம் கடைவீதியில் மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மாட்டு தீவனம் விற்பனை செய்ததற்கான பாக்கி பணத்தை வசூல் செய்வதற்காக சென்றனர்.பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.இவர்கள் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள புதிய பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே, கும்பகோணத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்