ஆவடி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

ஆவடி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

Update: 2019-01-21 22:15 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த ஜெ.ஜெ. நகர், புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 29). ஷேர் ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மாதவி (22). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆகிறது.

முருகன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவி, செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த முருகன், சந்தேகப்பட்டு அவரிடம் யாருடன் பேசுகிறாய்? என்று கேட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த மாதவி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை மீட்டு வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாதவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாதவிக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்