மானாமதுரை 4 வழிச்சாலை பாலங்களில் விளக்குகள் அமைக்க வேண்டுகோள்

மானாமதுரை 4 வழிச்சாலை பாலங்களில் விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-01-21 22:45 GMT

மானாமதுரை,

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான 4 வழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் விளக்குகள் பொருத்த வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான 75 கி.மீ து£ரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையில் சிலைமான் புளியங்குளம், திருப்புவனம், மானாமதுரை, மேலப்பசலை, கமுதக்குடி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் திருப்புவனம் பைபாஸ் ரோடு மற்றும் கமுதக்குடி பாலம் தவிர்த்து மற்ற பாலங்களின் பணிகள் முடிந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் பாலங்களில் விளக்குகள் இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

பாலம் தொடங்கும் இடம், முடிவடையும் இடங்களில் உள்ள சர்வீஸ் சாலைகளில் இருந்து திடீரென வரும் வாகனங்களால், 4 வழச்சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறி விபத்துகளில் சிக்கி வருகின்றன. பாலம் தொடங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் விளக்குகள் இன்றி இருளில் இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விளக்குகள் இல்லாததால் வெளியூர் வாகனங்கள் பல செல்லக்கூடிய இடம் குறித்து தெரியமல் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் பாலங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்