என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி “தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்”

“என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

Update: 2019-01-21 23:00 GMT

மதுரை,

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:–

எனது கணவர் இறந்துவிட்டார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் ஜவுளிக்கடையில் 3 வருடங்களாக பணிபுரிந்து வந்தாள். இந்த நிலையில் கடை உரிமையாளரின் நண்பர் விருந்து வைப்பதாக கட்டாயப்படுத்தி எனது மகளை அழைத்து சென்றார். அன்று மதியம் 3 மணிக்கு வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்தாள். அவளுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது அவளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுபற்றி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் சின்னப்பா என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட பலருக்கு தொடர்பு இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனது மகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிற குற்றவாளிகள் பணபலம் மிக்கவர்கள். எனவே எனது மகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் பலாத்கார சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து தண்டிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார்.

இந்த பரபரப்பு கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் மகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை கைது செய்யதாது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து விளக்கம் அளிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இன்று (22–ந்தேதி)நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்