திருவண்ணாமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி - திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-01-21 22:57 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங் குளம், தாமரை குளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். அதன்படி, திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

இதனை முன்னிட்டு காலையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின் படி, திருவண்ணாமலை பகுதியை வல்லாள மகாராஜா என்ற மன்னர் ஆண்டு வந்தார். அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தரான வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம், வல்லாள மகாராஜா தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம் கேட்டு வேண்டி வந்து உள்ளார். ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறி உள்ளார். அதன்படி, வல்லாள மகாராஜாவும், அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார்.

தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார். அப்போது போர்க்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனாக பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக நேற்று மாலை அறிவொளிப்பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் சென்ற போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.

மேலும் செய்திகள்