கொடைரோடு அருகே பள்ளத்தில் இறங்கிய பஸ் - பெண் உள்பட 7 பேர் காயம்

கொடைரோடு அருகே பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பெண் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-01-21 23:15 GMT
கொடைரோடு,

பழனியில் இருந்து நேற்று ஒரு அரசு பஸ் மதுரைக்கு வந்து கொண்டு இருந்தது. பஸ்சை சத்திரப்பட்டி சாமியார்புதூரை சேர்ந்த மதிவாணன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் சாலையின் குறுக்கே வந்தது. எனவே மோட்டார்சைக்கிளில் மோதி விட கூடாது என கருதிய டிரைவர் பஸ்சை இடது புறமாக திருப்பியபோது அது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் மதுரை புதுசுக்காம்பட்டியைச் சேர்ந்த சாவித்திரி (35) உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதில் சாவித்திரி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும், மற்றவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்