மணல்மேடு அருகே விஷம் குடித்த பெண் சாவு உதவி கலெக்டர் விசாரணை

மணல்மேடு அருகே விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-01-22 22:15 GMT
மணல்மேடு,

நாகை மாவட்டம், மணல்மேடு அருகே வரகடை பெரிய தெருவை சேர்ந்தவர் நியாசுதீன். இரவது மனைவி நிகார் சுல்தானா (வயது 27). திருமணமாகி 5 ஆண்டுகளான இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 18-ந் தேதி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த நிகார் சுல்தானா, வீட்டில் இருந்த வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந் தேதி நிகார் சுல்தானா பரிதாபமாக இறந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து நிகார் சுல்தானாவின் தாய் மும்தாஜ் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஷம் குடித்து இறந்த நிகார் சுல்தானாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்