மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்

அரூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-22 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் மேல் பாட்சாபேட்டையை சேர்ந்தவர் குலாப் (வயது 27). அரூர் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர்கள் சலீம்(28), ஏகநாதன்(32), இஸ்மாயில் (30) மற்றும் பச்சனாம்பட்டியை சேர்ந்தவர் சுல்தான்(28). நண்பர்களான இவர்கள் 5 பேரும் சுண்டாங்கிப்பட்டியில் உள்ள அக்ரஹாரம் சமத்துவபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் காரில் சென்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். வழியில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 5 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் சலீம், குலாப் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

மேலும் படுகாயம் அடைந்த ஏகநாதன், இஸ்மாயில், சுல்தான் ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏகநாதன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்