உளுந்தூர்பேட்டையில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் பிறந்தநாள் கொண்டாட தாயார் பணம் தராததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-04 22:30 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை பாரிவள்ளல் தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி வள்ளி. இவர்களுடைய மகன் சக்தி சங்கர் (வயது 20). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று சக்தி சங்கருக்கு பிறந்த நாள் ஆகும்.

இதனால் நேற்று முன்தினம் இரவு அவர் தனது தாயார் வள்ளியிடம், பிறந்த நாள் கொண்டாட ரூ.2 ஆயிரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் தற்போது தர முடியாது, காலையில் தருகிறேன் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சக்தி சங்கர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சக்தி சங்கர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து வள்ளி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சக்தி சங்கரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் அன்று ஐ.டி.ஐ. மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்