கணவர் தகராறு செய்ததால் மகள்களுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி சிறுமி சாவு

கணவர் தகராறு செய்ததால் மகள்களுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-14 23:00 GMT
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி பால்மடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி இளஞ்சியம் (வயது 40). இவர்களுக்கு அபிநயா (13), கார்த்திகா (11) என்று 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் மணி, ரேவதி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இதில் மணி-ரேவதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இளஞ்சியம் தனது மகள்களுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். மணி 2-வது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் மணியும், அவரது 2-வது மனைவி ரேவதியும், இளஞ்சியத்திடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இளஞ்சியம் தற்கொலை செய்து கொள்வதற்காக அரளி விதையை (விஷம்) அரைத்து கடந்த 12-ந்தேதி இரவு சாப்பாட்டுடன் கலந்து தின்றார். பின்னர் விஷம் கலந்த சாப்பாட்டை தனது மகள்களான அபிநயாவுக்கும், கார்த்திகாவுக்கும் கொடுத்தார். இதில் விஷம் கலந்தது தெரியாமல் அபிநயாவும், கார்த்திகாவும் அந்த சாப்பாட்டை தின்றனர். இதனால் 3 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து இளஞ்சியத்தின் வீடு வெகுநேரம் ஆகியும் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வாயில் நுரை தள்ளியபடி இளஞ்சியம், அபிநயா, கார்த்திகா ஆகிய 3 பேரும் மயங்கி கிடந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி கார்த்திகா நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இளஞ்சியம், அபிநயா ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் உத்தரவின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்