கணவரின் கடன் தொல்லையால் தூக்கு போட்டு பெண் தற்கொலை

கணவரின் கடன் தொல்லையால் வேதனை அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-18 23:18 GMT

வில்லியனூர்,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது30) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்த இவர் தங்கி தையல் கடை நடத்தி வந்தார்.அப்போது அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ஜெயசுதா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.பின்னர் அது காதலாக மாறியது.இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.அதன்பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் நாகர்கோவிலில் முறைப்படி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் வில்லியனூர் மெயின் ரோட்டில் ஒரு வாடகை வீட்டின் கீழ் தளத்தில் தையல் கடையும், வீட்டின் மாடியில் ராஜேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தனது தொழிலை மேம்படுத்தவும், வீட்டு செலவுக்கும் பலரிடம் ராஜேஷ் கடன் வாங்கினார். சுமார் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் ராஜேஷ் மிகவும் சிரமப்பட்டார். பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்தனர்.

இந்த கவலையை மறக்க ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடியானார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.சம்பவத்தன்று கடன் கொடுத்தவர்கள் ராஜேஷ் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு தகாதவார்த்தைகளால் திட்டி விட்டு சென்றனர்.

இதனால் மன வேதனை அடைந்த ஜெயசுதா தனது கணவரிடம் கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டின் படியேறி வந்து திட்டி விட்டு செல்வது அவமானமாக உள்ளது என கூறி அழுது புலம்பினார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் ராஜேஷ் மது குடிக்க சென்று விட்டார்.அன்று இரவு அவர் வீடுதிரும்பவில்லை. மறுநாள் காலை வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி இருந்ததால் மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவரை தேடவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தேகம் அடைந்த ராஜேஷ் வீட்டி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அப்போது படுக்கை அறையில் மின்விசிறியில் ஜெயசுதா துப்பட்டாவால் தூக்கு போட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஜெயசுதா தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜெயசுதாவின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு திவாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்