விவசாயி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே, சொத்து தகராறில் இரும்பு கம்பியால் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-19 22:15 GMT
நாமகிரிப்பேட்டை,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி மணியக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வரதராஜ் (வயது 51). விவசாயி. நேற்று முன்தினம் அவர் திடீரென மாயமானார்.

இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், வரதராஜிக்கும், அவரது தம்பி விஜயகுமாருக்கும் (47) சொத்து தகராறு இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விஜயகுமார் மற்றும் 7 பேர் சேர்ந்து வரதராஜை வீட்டில் வைத்து இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும், பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி, மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி ஓடைக்கரையில் அவரது உடலை புதைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து விஜயகுமாருக்கு உடந்தையாக இருந்த 7 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி ஆகியோர் தலைமையிலான போலீசாருக்கு வரதராஜ் கொலை வழக்கில் தேடப்படுபவர்களில் சிலர் பேளுக்குறிச்சி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு தலைமறைவாக இருந்த, பொன்னாரம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன்(43), அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த மோகனசுந்தரம்(62), சேலம் மாவட்டம், வெள்ளாள குண்டம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மங்களபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவர்களை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அங்கிருந்து தப்பி செல்லமுயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த பூபதி( 24), மோகன்ராஜ் (19), சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்(22) என்பதும், இவர்களுக்கு வரதராஜ் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேரை நேற்று ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்