அரக்கோணம் அருகே தீக்காயம் அடைந்த கர்ப்பிணி சாவு குழந்தையும் இறந்தது

அரக்கோணம் அருகே தீக்காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-02-20 22:15 GMT

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே கீழ்குப்பம் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34), கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்மு (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. ராஜேஷ் வெளியே சென்றிருந்தபோது, கர்ப்பிணியாக இருந்த அம்மு கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி இரவு உணவு செய்ய மண்எண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது தீ சேலையில் பற்றி எரிந்தது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தாயார் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அம்முவுக்கு கடந்த 13–ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. 2 நாளில் குழந்தை இறந்துவிட்டது. மேலும் கடந்த 18–ந் தேதி அம்முவும் இறந்து விட்டார்.

இதுகுறித்து அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அம்முவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்