கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி சாவு; 5 பேர் கைது கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

அய்யம்பேட்டை அருகே கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி இறந்தது தொடர்பான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-20 22:15 GMT
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி ஹவ்வா நகரை சேர்ந்தவர் மைதீன்பாட்சா. இவருடைய மகன் சாகுல்அமீது (வயது27). இவர் சக்கராப்பள்ளியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய தம்பி பைசல்ரகுமான் (23). இவர் தனது அண்ணனுக்கு உதவியாக செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சாகுல்அமீதுக்கு, திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன், சாகுல்அமீது தலைமறைவானார்.

சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சாகுல்அமீதுவின் தம்பி பைசல்ரகுமான் திடீரென ரத்த வாந்தி எடுத்தார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த 17-ந் தேதி இறந்தார். இதுகுறித்து பைசல் ரகுமானின் தாய் மும்தாஜ் பேகம் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதில், பைசல்ரகுமானுக்கு சிலர் விஷம் கலந்த பிஸ்கட்டை கொடுத்து கொலை செய்து விட்டதாகவும், அவருடைய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 18-ந் தேதி தஞ்சை-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டமும் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பைசல் ரகுமான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

இதுதொடர்பாக சாகுல்அமீதுவுடன் தலைமறைவான பெண்ணின் உறவினர்கள் சக்கராப்பள்ளியை சேர்ந்த சாதிக்பாட்சா (52), அப்துல் சமது (26), அய்யம்பேட்டையை சேர்ந்த அப்துல் மஜித் (45), மேல வழுத்தூரை சேர்ந்த சையது மதானி (33), மாத்தூரை சேர்ந்த டேனி (40) ஆகிய 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். பைசல்ரகுமான் எப்படி கொலை செய்யப்பட்டார்? என கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்