ராமநத்தம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு

ராமநத்தம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-02-27 22:45 GMT
ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த ஆக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை ராமநத்தத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் பொருட்களை வாங்க சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு, திட்டக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். ஆக்கனூரில் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்ற போது, முருகேசன், முன்புறம் உள்ள படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை இயக்கினார்.

இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் முருகேசன் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனின் மகன் சதீஷ்குமார் ராமநத்தம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்