வெங்கல் அருகே வாகனம் மோதி வேன் டிரைவர் பலி

வெங்கல் அருகே வாகனம் மோதி வேன் டிரைவர் பலியானார்.

Update: 2019-03-07 22:30 GMT
பெரியபாளையம்,

வெங்கல் அருகே உள்ள காரணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி (வயது 28). இவர் வாணியன் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் வாணியன் சத்திரத்தில் இருந்து பூச்சி அத்திப்பட்டு நோக்கி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீபதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேன் டிரைவர் ஸ்ரீபதி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரது நண்பர் மதியழகன் (வயது 17) படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான ஸ்ரீபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்