திருநாவுக்கரசிடம் 2-வது நாளாக விசாரணை மேலும் பலர் சிக்குகிறார்கள்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் கைதான திருநாவுக்கரசை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகசிய இடத்தில் நடந்துவரும் இந்த விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதை தொடர்ந்து மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

Update: 2019-03-16 22:30 GMT
கோவை,

பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை 4 நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. இதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

திருநாவுக்கரசு மீது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் 24-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் ஆந்திர மாநிலத்துக்கு சென்று பதுங்கினார்.

அப்போது அவரது செல்போனில் இருந்த ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள், முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை திருநாவுக்கரசு அழித்து விட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருநாவுக்கரசின் தோழி ஒருவர் மூலம் தான் கல்லூரி மாணவிகளுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த தோழி யார்? எந்தெந்த வகையில் உதவி செய்தார்? என்றும் விசாரணை நடத்தினர்.

திருநாவுக்கரசிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலியல் வன்முறையில் 20 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜுக்கு உள்ள தொடர்பு மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோது அடைக்கலம் கொடுத்து உதவி செய்தவர்கள் யார்? என்றும் அவரிடம் பெயர் விவரங்கள் கேட்கப்பட்டது. பாலியல் சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்து வந்ததால் இதில் தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தப்படுவதுடன், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுக்க பயன்படுத்திய தோட்ட வீடு உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்