பெங்களூருவில் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நடவடிக்கை

பெங்களூருவில், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2019-03-16 22:01 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்கள் வருகிற 19-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெங்களூரு ஜெயநகர் 2-வது பிளாக்கில் உள்ள மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அலுவலகத்திலும் (தெற்கு), பெங்களூரு வடக்கு தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் கே.ஜி.ரோட்டில் உள்ள வருவாய் பவனின் பின்புறம் உள்ள பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் 26-ந் தேதி மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை சுற்றி 100 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் வருகிற 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய நாள் தடை உத்தரவு பொருந்தாது.

மேற்கண்ட தகவல் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்