உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.55 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் வந்தவரிடம் ரூ.55 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-17 22:15 GMT
வரதராஜன்பேட்டை,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிமடத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சசிக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூரில் இருந்து நாகை மாவட்டம், தரங்கம்பாடி நோக்கி சென்ற ஒரு காரை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் ஓட்டேரி சாமி நகர் 15-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சூரியன் (வயது 45) என்பது தெரியவந்தது. அவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.55 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்