கயத்தாறு அருகே மீன் வியாபாரியிடம் ரூ.1.39 லட்சம் பறிமுதல்

கயத்தாறு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-17 22:00 GMT
கயத்தாறு, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி யூனியன் உதவி பொறியாளர் தமிழ்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், வேனில் இருந்தவர் சிவகங்கை மாவட்டம் சிவகாமிபுரத்தை சேர்ந்த மரிய யோவான் (வயது 41) என்பதும், மீன் வியாபாரியான அவர் வியாபாரத்துக்காக கன்னியாகுமரிக்கு ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவில்பட்டி தாசில்தார் பரமசிவனிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்