ஆம்பூரில் மணல் திருட்டை தடுக்காத இன்ஸ்பெக்டர் இடமாற்றம் டி.ஐ.ஜி. நடவடிக்கை

ஆம்பூரில் மணல் திருட்டை தடுக்காத இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி.உத்தரவிட்டார்.

Update: 2019-03-18 22:00 GMT
ஆம்பூர், 

ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோமலாபுரம், சோலூர், ஆலாங்குப்பம், மின்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்று பகுதியில் மணல் திருட்டு அதிக அளவில் நடக்கிறது. இதற்கு ஆம்பூர் தாலுகா போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் ஆம்பூர் பகுதியில் மணல் திருட்டை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி தனிப்படை போலீசார் ஆம்பூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோமலாபுரம் பகுதியில் 3 மாட்டு வண்டிகளை தனிப்படையினர் பிடித்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் ஆம்பூர் தாலுகா பகுதியில் மணல் திருட்டு நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அவரை அரக்கோணம் போலீஸ் உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து அவர் தற்காலிகமாக அரக்கோணத்துக்கு சென்றார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்