வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் திருடிய இலங்கை அகதி கைது

வளசரவாக்கத்தில், என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 2 பேரும் இலங்கை அகதிகள் ஆவர்.

Update: 2019-03-20 23:15 GMT

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலை ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். கடந்த வாரம் இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டார்.

அப்போது மர்மநபர்கள், இவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் சக்கரபாணி நகரில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த சிவராஜன் என்ற ராஜன்(43) என்பவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திவாகர் என்ற தருண்(33) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான ராஜன், திவாகர் இருவரும் இலங்கை தமிழர்கள் ஆவர். மதுரையில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருந்தனர். இலங்கைக்கு கள்ள தோணியில் பணம் கடத்திய வழக்கில் கைதான இருவரும் ஜாமீனில் வெளியே வந்து சென்னை மதுரவாயலில் தங்கி, மீன் கடை நடத்தி வந்தனர்.

ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் வீடுகளில் கொள்ளையடித்து வந்தனர். இதற்காக வளசரவாக்கம், சக்கரபாணி நகரில் உள்ள விடுதி அறையில் வாடகைக்கு தங்கி, இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டனர். அப்போது பத்மநாபன் வீடு பூட்டி இருப்பதை அறிந்து, வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை திருடியதும் தெரிந்தது.

இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே மதுரவாயல், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதேபோல் வீடுகளில் கொள்ளையடித்து உள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்தும் 85 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்