10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் மாணவர்களுக்கு அனுப்பியவர் கைது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் மாணவர்களுக்கு அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-23 23:15 GMT
தானே, 

தானே மாவட்டம் பிவண்டியில் கடந்த 15 மற்றும் 18-ந்தேதிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 2 பாடங்களின் கேள்வித்தாள்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதில், தனது செல்போனில் அந்த கேள்வித்தாளை பார்த்து கொண்டிருந்தபோது, மாணவி ஒருவர் கையும், களவுமாக பிடிபட்டார்.

கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக பிவண்டி மற்றும் நார்போலி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், அந்த பகுதியில் பயிற்சி மையம் நடத்தி வரும் வாஜிர் சேக் (வயது40) என்பவர் சிக்கினார். அவரது செல்போனில் இருந்து தான் மாணவர்களுக்கு அந்த கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் கேள்வித்தாள் வெளியானதில் தேர்வு மைய ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்