உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் ரூ.73 லட்சம் நகை, பணம் திருட்டு வேலைக்காரர்கள் உள்பட 3 பேர் கைது

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதி வீட்டில் ரூ.73 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற வேலைக்காரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-03 22:45 GMT
மும்பை,

மும்பை ஜூகுவை சேர்ந்தவர் குர்பிந்தர் துகால் (வயது73). இவரது மனைவி ஹர்பிரீத் (60). இவர்களது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த ராம்சிங் சாட் (35), உத்தம்சிங் சாட் (20) ஆகிய 2 பேர் வீட்டு வேலைகள் செய்து வந்தனர்.

சம்பவத்தன்று அவர்கள் வயதான தம்பதி இருவருக்கும் இரவு உணவு கொடுத்தனர். அதை சாப்பிட்டதும் இருவரும் மயங்கினர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த போது, வேலைக்காரர்கள் இருவரையும் காணவில்லை. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதில் இருந்த ரூ.73 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தன. மேலும் அவர்களது செல்போனும் மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி இதுபற்றி ஜூகு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் வசித்து வரும் கட்டிடத்தின் வெளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

இதில், குர்பிந்தர் துகால் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் உள்பட 3 பேர் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதன் மூலம் அவர்கள் தான் நகை, பணத்தை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடினர்.

இந்தநிலையில், நேபாளத்திற்கு தப்பி செல்ல இருந்த அவர்கள் 3 பேரையும் கோவா மாநிலம் கர்வாரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் திருடிச்சென்ற நகை, பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான வேலைக்காரர்களுடன் சிக்கியது அவர்களது கூட்டாளியான டாம்னி சாட் (22) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்