மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய “அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” நெல்லையில் சரத்குமார் பிரசாரம்

“மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று சரத்குமார் பிரசாரம் செய்தார்.

Update: 2019-04-16 21:30 GMT
நெல்லை, 

“மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று சரத்குமார் பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரசாரம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். பாளையங்கோட்டை மார்க்கெட் திடல், டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்று அவர் பிரசாரம் செய்தபோது கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவருடைய ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகவும், மத்தியில் வலுவான ஆட்சி அமையவேண்டும் என்பதற்காகவும் தான் மாறுபட்ட கொள்கை உடைய கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த மெகா கூட்டணியை அமைத்து உள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் ஊழலற்ற நியாயமான நிலையான ஆட்சி அமையவேண்டும் என்றால், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும். இந்த கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுக்க வேண்டும்.

கல்வி திட்டங்கள்

தமிழகத்தில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது கல்விக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஏழை-எளிய மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மடிக்கணினி வழங்கினார். மேலும் இலவச சைக்கிள், பாடப்புத்தகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

அவருடைய மறைவுக்கு பிறகு, அவர் விட்டு சென்ற பணிகளை அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால்தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும்.

தீவிரவாதிகள் அழிப்பு

நரேந்திர மோடி பிரதமரான பிறகு தான் இந்தியாவில் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்கு திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மோடி இந்தியாவின் காவல்காரனாக இருந்து இந்தியாவை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி வருகிறார். பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில்தான் இந்தியாவில் தீவிரவாதிகள் கூண்டோடு அழிக்கப்பட்டு உள்ளனர். வலுவான இந்தியாவை உருவாக்க நெல்லை தொகுதியில் போட்டியிடுகின்ற மனோஜ்பாண்டியனை வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் பேட்டை கருங்காடு ரோடு நாராயணசாமி கோவில் அருகே வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட மாணவரணி தலைவர் சிவபாலன், பகுதி செயலாளர் ஜெனி, ஜெயலலிதா பேரவை தலைவர் கணபதிசுந்தரம், இலக்கிய அணி தலைவர் விவேகானந்தபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி துணைபொதுச்செயலாளர் சுந்தர், கொள்கைபரப்பு செயலாளர் விவேகானந்தன், மாணவர் அணி துணைசெயலாளர் நட்சத்திரவெற்றி, மாவட்ட செயலாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் ஸ்ரீதர்ராஜன், அழகேச ராஜா, கபிரியேல், மைக்கேல்ராஜ், பா.ஜ.க. நிர்வாகி அழகுராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவந்திபுரத்தில் பிரசாரம்

சிவந்திபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ. முருகையா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்