ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-04-16 22:15 GMT

சிவகங்கை,

காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைத்துள்ள ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் ஹர்பிரீத்சிங் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, திருமயம், ஆலங்குடி சட்டசபை தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

இது தவிர மானாமதுரை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் மற்றும் அழகப்பா அரசு பாலிடெனிக் கல்லூரிகளில் வைக்கப்படும்.

அடுத்த மாதம் (மே) 23–ந் தேதி அன்று ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களை நாடாளுமன்றதேர்தல் பொது பார்வையாளர் ஹர்பிரீத்சிங், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சீனிவாசலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர்களிடம் ஓட்டு எண்ணும் மையத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஓட்டு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர். காரைக்குடி தாசில்தார் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்