வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது

வலங்கைமான் அருகே வயலுக்கு செல்லும் பாதை தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-17 22:15 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியை அடுத்த சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் அருகருகே நிலங்கள் உள்ளன. இதில் சாகுபடி மற்றும் அறுவடை காலங்களில் வயல் பகுதிக்கு சென்று வரும் பாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்திக்கும் முனியாண்டிக்கும் பாதை தகராறு ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட தகராறில் முனியாண்டியின் மகன்கள் பாண்டியன் (55), குருமூர்த்தி (47) ஆகியோர் கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டன் (35) வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன், அவருடைய தம்பி குருமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பாண்டியனின் மகன் கார்த்தி (24) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்