அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-04-17 23:15 GMT
அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (31). இவர்களுக்கு ஹேசிகா (11), ஹன்சிகா (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வெங்கடேசனுக்கும், அவருடைய மனைவி கிருத்திகாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசன் விஷம் குடித்துவிட்டார். இதில் சிறிதுநேரத்தில் அவர் இறந்தார்.

இதுபற்றி தெரியவரவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்