சேலத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-19 22:15 GMT
சேலம், 

சேலம் குகை கருங்கல்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சவுண்டப்பன். கூலி தொழிலாளி. இவரது மகன் சுகுமார் (வயது 34). எம்.இ. படித்துள்ளார். என்ஜினீயரான இவர் பல்வேறு ஊர்களில் ஏராளமான நிறுவனங்களில் வேலை தேடி அலைந்து உள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

எம்.இ. படித்தும் வேலை கிடைக்கவில்லையே என்று விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்த அவர் பின்னர் தனது அறைக்கு தூங்க சென்றார். முன்னதாக அறையை உள்புறமாக பூட்டினார். பின்னர் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் சுகுமாரின் அறை திறக்கவில்லை. இதனால் பெற்றோர் அங்கு சென்று அந்த அறையை தட்டிப்பார்த்தனர். ஆனால் அறை திறக்க வில்லை. இதனால் பயந்து போன அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சுகுமார் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தது கண்டு அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்