வீரப்பன் என்கவுண்ட்டரில் பதக்கம் பெற்றவர்: ‘பதவி உயர்வு கிடைக்காததால் ராஜினாமா செய்கிறேன்’ மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவிப்பு

வீரப்பன் என்கவுண்ட்டரில் பதக்கம் பெற்ற மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர், பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் தனது வேலையை ராஜினாமா செய்யப்போவதாக ‘டுவிட்டர்’ பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

Update: 2019-04-26 00:00 GMT
செங்குன்றம்,

சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜவகர் பீட்டர். இவர், 1997-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

இவர், 2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் சிறப்பு படையில் இடம்பெற்று இருந்தார். அந்த சமயத்தில் போலீசாரால் வீரப்பன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதால் சிறப்பு படையில் இடம்பெற்று இருந்த போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.3 லட்சம் ரொக்க பரிசு, பதக்கம், வீட்டுமனை மற்றும் பதவி உயர்வு வழங்கி கவுரவப்படுத்தினார்.

அதன்பிறகு இன்ஸ்பெக்டரான ஜவகர் பீட்டருக்கு இதுவரையிலும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக டி.எஸ்.பி. பதவி உயர்வு கிடைக்காததால் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். ஆனாலும் அதற்கான எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் வெறுத்துப்போன ஜவகர் பீட்டர், தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும், போலீஸ் கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

போலீஸ் துறையில் எனக்கு வெகுமதி(ரூ.3 லட்சம், வீட்டுமனை, பதக்கம்), பதவி உயர்வு என அத்தனை பெருமைகளையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி கவுரவப்படுத்தினார். ஆனால் அதன்பிறகு எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை.

எனக்கு பிறகு இன்ஸ்பெக்டரான 500-க்கும் மேற்பட்டோர் இப்போது உதவி கமிஷனராக உள்ளனர். எனக்கு ‘சல்யூட்’ அடித்தவர்களுக்கு, நான் இப்போது ‘சல்யூட்’ அடித்து கொண்டிருக்கிறேன்.

ஜெயலலிதா வழங்கிய பதவி உயர்வை கணக்கில் எடுக்காமல் பழைய சர்வீஸ் அடிப்படையிலேயே எனது சீனியாரிட்டியை பார்க்கின்றனர். இது தவறு என்று கூறி கோர்ட்டுக்கு சென்றேன். சுப்ரீம் கோர்ட்டும் எனது கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் எனக்கூறி இருந்தது. ஆனாலும் எனது கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

முதல்-அமைச்சருக்கு தவறான தகவலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அவமரியாதையுடன் வேலை செய்வதைவிட ராஜினாமா செய்வதே மேல் என்ற நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். அதனால் போலீஸ் கமிஷனரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

மேலும் அவர், ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற ரூ.3 லட்சம், பதக்கம், வீட்டுமனை ஆகியவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர், இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில் அவருக்கு பதவி உயர்வு கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. வழக்கு முடிந்தவுடன் அவருக்கு முறையான பதவி உயர்வு கிடைக்கும்” என்றனர்.

மாதவரம் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர், தனது வேலையை ராஜினாமா செய்வதுடன், வீரப்பனை என்கவுண்ட்டர் செய்ததற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்ற ரொக்கம், பதக்கம், வீட்டுமனையை திரும்ப ஒப்படைக்க உள்ளதாகவும் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்