கபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவருக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகன் கைது

கபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-30 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் சந்திரன் (வயது69). இவர், ஈச்சங்குடி புது தெருவில் வசிக்கும் பாலன்(50) என்பவரின் மகன் திருமணத்திற்காக கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ. 1 லட்சம் கடன் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்ததும் ரூ. 50 ஆயிரத்தை பாலன் திரும்பி கொடுத்துள்ளார். மீதி கொடுக்க வேண்டிய ரூ.50 ஆயிரத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ. 50 ஆயிரத்தை சந்திரன் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. நேற்றுமுன் தினம் இரவு சந்திரனும், அவரது மைத்துனர் ரவி மகன் வினோத் (31) ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஈச்சங்குடி மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த பாலனும், அவரது மகன் பாபு (25) ஆகியோரும் சேர்த்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரையும் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

2 பேர் கைது

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாலன், பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்