பிளஸ்-1 மாணவி பலாத்காரம் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற டிரைவரால் பரபரப்பு

தக்கலை அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர், போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-01 23:15 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே கப்பியறை ஆரியங்காவுவிளை பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 26), வேன் டிரைவர். தற்போது இவர், குருவிக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கும், பிளஸ்-1 தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவியை, டிரைவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வினு வீட்டுக்குள் மாணவி சென்றதை சிலர் பார்த்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனை அறிந்த வினு பின்வாசல் வழியாக தப்பி ஓடி விட்டார்.

தொடர்ந்து அங்கிருந்த மாணவியை பிடித்து பொதுமக்கள் விசாரணை நடத்தியதில், தன்னை பலவந்தப்படுத்தி வினு பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து மாணவி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வினு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதற்கிடையே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் வினு தனது சொந்த ஊரான கப்பியறை ஆரியங்காவுவிளை பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று வினுவின் வீட்டை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அப்போது போலீசுக்கு பயந்து விஷ மாத்திரையை தின்று வினு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை பலாத்காரம் செய்த வேன் டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்