ஒகேனக்கல் வனப்பகுதியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - மர்ம ஆசாமிகள் 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ஒகேனக்கல் வனப்பகுதியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம ஆசாமிகள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-01 23:15 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் முனுசாமி (வயது 27). மெக்கானிக். இந்தநிலையில் மே தின விடுமுறைக்காக முனுசாமி ஊருக்கு வந்திருந்தார். நேற்று முனுசாமி, தனது உறவுக்கார 15 வயது சிறுமியுடன் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல்லுக்கு சென்றார். அங்கு அவர்கள் குளித்த பிறகு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் 2 பேரும் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முனுசாமியும், அந்த சிறுமியும் வனப்பகுதியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவன் தான் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் முனுசாமியின் மார்பு பகுதியில் சரமாரியாக சுட்டான். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

அப்போது அந்த மர்ம ஆசாமிகள், அந்த சிறுமியை ஓடினால் உன்னையும் சுட்டுக்கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி கையை பிடித்து இழுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுமி தப்பி சாலைக்கு வந்து சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகளிடம் நடந்த விவரத்தை சிறுமி கூறினார். இதனால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு சென்றனர். அவர்களை கண்டதும் 4 மர்ம ஆசாமிகளும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வாலிபர் முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறுகையில், இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்