தென்தாமரைகுளத்தில் குடிசை எரிந்து மூதாட்டி பலி

தென்தாமரைகுளத்தில் குடிசை எரிந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-04 23:00 GMT
தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி அம்பாள் (வயது 83). இவர்களுக்கு குழந்தை இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் இறந்து விட்டார். இதனால், அம்பாள் தென்தாமரைகுளத்தில் உள்ள உறவினர் வீட்டின் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அம்பாள் உடல்நிலை சரியில்லாமல் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அம்பாள் சத்தம் போட்டு அலறினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அம்பாள் தீயில் கருகி பலியானது தெரியவந்தது.

இதுபற்றி அம்பாளின் உறவினர் சந்திரன் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்பாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிசையில் தீ எப்படி பிடித்தது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்