தண்டவாளம் அருகே சிதைந்து கிடந்த பெண் உடல்: தற்கொலையா-கொலையா? போலீசார் தீவிர விசாரணை

தண்டவாளம் அருகே சிதைந்த நிலையில் பெண் உடல் கிடந்தது. அவர் தற்கொலை செய்தாரா அல்லது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-13 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள தண்டவாளம் அருகே நேற்று காலை பெண் ஒருவர், உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த பெரியகோட்டையை சேர்ந்த முருகனின் மனைவி பிச்சைபாண்டி (வயது 40) என்பது தெரியவந்தது. அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் பிச்சைபாண்டி பெரியகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் பிச்சைபாண்டி ரெயில் மோதி இறந்தாரா? அல்லது அவரை மர்ம நபர்கள் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு சென்றதில், ரெயில் மோதி அவரது உடல் சிதைந்ததா? அல்லது பிச்சைபாண்டி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்