எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

Update: 2019-05-14 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி வடக்கு வேளாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி செவ்வந்தி. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு அளித்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

நானும், எனது குடும்பத்தினரும், எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடைய வீட்டிலும், நிலத்திலும் கொத்தடிமையாக 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தோம். எனது கணவரின் சகோதரர் பழனிவேல், மாமனார் அய்யாக்கண்ணு, மாமியார் கங்கையம்மாள், மகன்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம்.

அவர் சிறுக, சிறுக சேர்த்த பணத்தில் நிலம் வாங்குவதற்காக பணத்தை கோட்டைக்காட்டை சேர்ந்த ஒருவரிடம் நிலம் வாங்க கொடுத்தார். நிலம் வாங்கிய அவர் பின்னர் அதனை தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் கொத்தடிமையாக வேலைபார்த்தவரிடம் கூறினோம். அவர் எங்களுக்கு உதவுவதாக கூறினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்தது.


இந்த நிலையில் எனது மாமனார் இறந்து விட, அவருடைய கைவிரல் ரேகையை, நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவர் பதிவு செய்து எங்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக்கொண்டார். தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறி அடியாட்களுடன் வந்து தகராறு செய்து வீடுகளை சேதப்படுத்திவிட்டார்

இதை தடுத்த நான் எனது கணவர், பழனிவேல் ஆகியோர் காயம் அடைந்தோம். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. எனவே எங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சமூக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்