தொழில் அதிபரை கொன்று உடலை எரித்த பெண் உள்பட 4 பேர் கைது தொழில்போட்டியில் வெறிச்செயல்

பால்கரில் தொழில் போட்டியில் தொழில் அதிபரை கடத்தி கொலை செய்து உடலை எரித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-14 22:31 GMT
வசாய்,

தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்தவர் ஆரிப் சேக். தொழில் அதிபர். இவர் பால்கரில் தொழிற்சாலை நடத்தி வந்தார். ரெயிலில் பால்கர் சென்று பின்னர் அங்கிருந்து அவர் ஆட்டோவில் தொழிற்சாலைக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று இவர் பால்கர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்ற போது கார் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் ஆரிப் சேக்கை காரில் கடத்தி சென்றது.

இதுகுறித்து தொழில் அதிபரின் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ஆரிப் சேக்கை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பால்கரில் உள்ள வீட்டில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொன்று உடல் எரிப்பு

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஆரிப் சேக்கை பிரசாந்த் சாங்கே என்பவர் உள்பட 4 பேர் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து அவர்கள் மற்றொரு காரில் தொழில் அதிபரை வேறு எங்கேயோ கொண்டு சென்றது தெரியவந்தது.

இந்தநிலையில், குஜராத் மாநிலம் வாபியில் பதுங்கி இருந்த பிரசாந்த் சாங்கே போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர், தொழில் போட்டி காரணமாக அவரை பார்வாடி பகுதிக்கு கடத்தி சென்று அவரை கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை 15 லிட்டர் பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

கூட்டாளிகள் கைது

இதையடுத்து போலீசார் அவர் கூறிய இடத்திற்கு சென்று, அங்கு எரிந்து கிடந்த ஆரிப் சேக்கின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரசாந்த் சாங்கேயின் கூட்டாளிகளான சாம்தேவ் சந்தோஷ், ஜல்காவில் இருந்த மகாஜன் மற்றும் சுமிதா ஷெட்டி என்ற பெண் ஆகியோரையும் கைது செய்தனர்.

கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்