கணவர் சிறைக்கு சென்றதால் மன வேதனை - தீக்குளித்து பெண் தற்கொலை

கணவர் சிறைக்கு சென்றதால் மன வேதனைக்கு ஆளான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-15 21:45 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள ஒட்டுப்பட்டறை வசம்பள்ளத்தை சேர்ந்தவர் ரமேஷ். தொழிலாளி. இவருடைய மனைவி சீமா(வயது 35). இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகளும், அமுதகண்ணன் என்ற மகனும் உள்ளனர். ஸ்டேன்லி பார்க் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் விஜயலட்சுமி படித்து வருகிறாள். அமுதண்ணன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலக்கம்பையில் நடந்த திருட்டு வழக்கில், ரமேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது கணவர் சிறைக்கு சென்றுவிட்டதால், சீமா மன வேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சீமா, தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயின் வெம்மை தாங்காமல் அவர், வலியால் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, சீமாவை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் தீயில் கருகி படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அருவங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் சிறைக்கு சென்றதால் மன வேதனைக்கு ஆளான பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்