இரணியல் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் 2 பேருக்கு வலைவீச்சு

இரணியல் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-05-18 22:15 GMT
அழகியமண்டபம்,

இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசன் மற்றும் போலீஸ் ஏட்டு ஒருவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காரங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை போலீசார் வழிமறித்தனர். மினிலாரியை வடக்குநுள்ளி விளையை சேர்ந்த செல்வகுமார் (வயது 22) ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (30) என்பவரும் இருந்தார். அப்போது செல்வகுமார் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக தெரிகிறது.

இதுபற்றி ராம கணேசன் கேட்டதால், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், மகேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து ராம கணேசனை சரமாரியாக தாக்கியதோடு, அவரது சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

2 பேருக்கு வலைவீச்சு

உடனே ராம கணேசன் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சேசுபாதம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மினிலாரியை விரட்டினர். போலீசார் நெருங்கியதை பார்த்ததும் அவர்கள் மினிலாரியை விட்டு விட்டு நைசாக தப்பி விட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார், மகேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்