மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதில் தகராறு: பிளஸ்-2 மாணவர் குத்திக்கொலை

மோட்டார்சைக்கிளுக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-05-20 22:45 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 16). பிளஸ்-2 மாணவர். இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கல்லூரி மாணவர் நந்தா(19) என்பவருடன் கடந்த 17-ந்தேதி இரவு குரோம்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அப்போது மோட்டார்சைக்கிளுக்கு வழிவிடுவதில் இவர்களுக்கும், நாகல்கேணியை சேர்ந்த பம்மல் நகர பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவரான மதன்(42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதன், தனது மகன் நித்தியானந்தம்(22) என்பவருடன் சேர்ந்து மாணவர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன், அவருடைய மகன் நித்தியானந்தம் இருவரையும் கைது செய்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் விக்னேஷ் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். நந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்